search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தூர் அருகே  வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தாய்-மகள்
    X

    சாத்தூர் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தாய்-மகள்

    • தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
    • தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் முத்துராமலிகாபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது97). இவர் முதலில் ராமசாமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இதில் அன்னலட்சுமி (75) என்ற மகள் உள்ளார்.

    ராமசாமி 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனலட்சுமி, முத்துசாமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு மாரியப்பன், பாலகிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அவரது வீட்டில் தனலட்சுமியும், அன்னலட்சுமியும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் சிவராமச்சந்திரன் என்பவர் சந்தேகம் அடைந்து மாரியப்பனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாரியப்பனும், வேலுச்சாமி மகன் சக்தி குமார் என்பவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு தனலட்சுமியும், அன்னலட்சுமியும் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

    அவர்கள் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர்கள் 2 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இது பற்றிய புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, அன்னலட்சுமி ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமி வயது முதிர்வு காரணமாகவும், அன்னலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என்றும், அவர்கள் ராணுவத்தில் பணியாற்றி இறந்த தங்களது உறவினர் ராமசாமி என்பவரின் பென்ஷனை பெற்று வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் அவர்கள் வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். இதனால் தாயும், மகளும் இறந்து 2 நாட்களுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

    தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×