பஞ்சு-நூல் விலை உயர்வால் ரூ.4500 கோடி ஆடை வர்த்தகம் இழப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் தகவல்

சர்வதேச சந்தையில் வர்த்தக போட்டிகள் கடுமையாகியுள்ளன. ஆடைக்கு தொடர்ச்சியாக விலை உயர்வு அளிக்க வர்த்தகர்கள் மறுக்கின்றனர்.
நூல் (கோப்பு படம்)
நூல் (கோப்பு படம்)
Published on

திருப்பூர்:

பஞ்சு விலை உயர்வால் தமிழக நூற்பாலைகள், பின்னலாடை (ஒசைரி) நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த 18 மாதங்களில் கிலோவுக்கு 169 ரூபாய் நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நூல் விலை மட்டுமின்றி நிட்டிங், டையிங், பிரின்டிங் என அனைத்து வகை ஜாப் ஒர்க் கட்டணங்கள், இதர மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களின் பின்னலாடை தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது.

வங்கதேசம், வியட்நாம், கம்போடிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, ‘ஆர்டர்’களை கைப்பற்ற முடியாமல் ஏற்றுமதியாளர்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

பஞ்சு விலை கேண்டி(356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை எட்டிப்பிடிக்க உள்ளது. கடந்த, 18 மாதங்களாக ஒசைரி நூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் வர்த்தக போட்டிகள் கடுமையாகியுள்ளன. ஆடைக்கு தொடர்ச்சியாக விலை உயர்வு அளிக்க வர்த்தகர்கள் மறுக்கின்றனர்.

போட்டி நாடுகளை விட, நமது பின்னலாடை ரகங்களின் விலை ஆடை ஒன்றுக்கு ரூ.75 முதல் 112 வரை அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான வெளிநாட்டு ஆர்டர்கள், வர்த்தக விசாரணையுடன் நின்று போகின்றன. போட்டி நாடுகளை நோக்கி செல்கின்றன. கடந்த 2021-22ம் நிதியாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 38 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருக்க வேண்டும்.

நூல் விலை, ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட காரணிகளால் ரூ.33 ஆயிரத்து 525 கோடி வர்த்தகத்தையே எட்டமுடிந்தது. அதாவது கடந்த நிதியாண்டில் மட்டும் திருப்பூர் ரூ. 4,500 கோடி மதிப்பிலான ஏற்றுமதியை இழந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com