சென்னையில் 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதம் வசூல்- போக்குவரத்து காவல் துறை அதிரடி

அண்ணாநகர் போக்குவரத்து கட்டுப்பாட்டறை கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.ஆக மொத்தம் இந்த 12 காவல் அழைப்பு மையங்களின் 84 நாட்கள் செயல் திறன் 11.4.2022 முதல் 3.7.2022 வரை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சென்னையில் 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதம் வசூல்- போக்குவரத்து காவல் துறை அதிரடி
Published on

சென்னை:

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை போக்குவரத்து காவல்துறை 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது.

ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்த போதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அது காலப்போக்கில் தேக்கமடைந்தது.

இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்த முடிவுசெய்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கடந்த 11.4.2022 அன்று 10 அழைப்பு மையங்களை திறந்து வைத்தார்.

அண்ணாநகர் போக்குவரத்து கட்டுப்பாட்டறை கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.

ஆக மொத்தம் இந்த 12 காவல் அழைப்பு மையங்களின் 84 நாட்கள் செயல் திறன் 11.4.2022 முதல் 3.7.2022 வரை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 12 காவல் அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் காரணமாக கடந்த 84 நாட்களில் 2,19,742 பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகை ரூ. 3,31,49,275 விதிமீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது.

இதில் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அழைப்புச் செய்து 1,674 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1,68,60,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் சராசரியாக ரூபாய் 10,000 அபராதம் செலுத்தி உள்ளனர்.

ஆக மொத்தம் 2,21,416 பழைய வழக்குகளில் ரூபாய் 5,00,09,275 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் 2,58,835 புதிய வழக்குகளுக்காக ரூபாய் 6,31,58,750 அபராதமாக வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் இந்த 84 நாட்களில் 4,80,251 வழக்குகளில் மொத்தம் ரூ.11,31,68,025 அபராத தொகையாக வசூலித்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com