search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை
    X

    பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை

    • தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • பெருமாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பள்ளிக்கரணை:

    மேடவாக்கம், புஷ்பா நகரை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவரது மகன் ஆல்வின் என்கிற பிரைட்(வயது25). ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதே பகுதி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள். இருவரும் நண்பர்கள்.

    நேற்று இரவு 9 மணியளவில் நண்பர்கள் இருவரும் பள்ளிக்கரணை, அம்பேத்கார் சாலை, கண்ணபிரான் கோவில் பின்புறம் இருந்தனர்.

    அப்போது 6 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆல்வினும், பெருமாளும் ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும் விரட்டிச் சென்ற கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பெருமாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதற்கிடையே அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது ஆல்வின் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய பெருமாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் ரவுடி ஆல்வினுக்கும், ஒருவருக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஆல்வினுடன் மோதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பள்ளிகரணை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×