

நாகர்கோவில்:
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் தலைமையிலான போலீசார் நேற்று அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் வாலிபர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் அரைகுறை ஆடையுடன் இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்ட இளம்பெண் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் வாலிபர் அருமனை பகுதியை சேர்ந்த கனிஸ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிப்பட்ட பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பிடிப்பட்ட வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது வாடகைக்கு வீடு எடுத்து வெளியூரில் இருந்து பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் வாடகை வீடு எடுத்து விபச்சாரம் செய்து வந்தவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.