

வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் 36 வயது பெண் தொழிலாளி வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது.
அதற்காக அந்த தேயிலை தோட்ட நிர்வாக தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து அவர் அங்கிருந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பெண்ணுக்கு எலி காய்ச்சல் இருப்பது பற்றிய தகவல் வந்ததும் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், அரசு ஆரம்ப சுகாதார ஆய்வாளர் கவின் தலைமையில் நகராட்சி களப்பணியாளர் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த பகுதி முழுவதும் பிளிச்சிங் பவுடரும் போடப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை பார்வையிட்டு, அதனுள் கிருமி நாசினி தெளித்து, கழிப்பிட தொட்டிகளின் குழாய்களுக்கு வலைகள் கட்டப்பட்டது. தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் உள்ள எலிப்பொந்துகள் அடைக்கப்பட்டது. எலிகாய்ச்சல் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று காலை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உள்பட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தினர்.