சத்தியமங்கலம் பகுதியில் தொடர்மழை- 200 ஏக்கர் உருளை கிழங்கு, பீன்ஸ் செடிகள் அழுகியது

தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி தோட்டம் குளம் போல மாறியது. இடைவிடாமல் தினமும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி செடிகள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளைப்பூண்டு பயிர் மழை வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை படத்தில் காணலாம்.
வெள்ளைப்பூண்டு பயிர் மழை வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை படத்தில் காணலாம்.
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக தாளவாடி, சத்தியமங்கலம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

மழை காரணமாக வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அடிக்கடி தாளவாடி பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலத்தை முழ்கியபடி செல்கிறது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் காடக நல்லி பகுதியில் உள்ள சிக்கூர், பெரிய உள்ளேபாளையம், சின்ன உள்ளே பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பீன்ஸ், உருளை கிழங்கு, வெள்ளைபூண்டு, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர்.

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த தோட்டங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி தோட்டம் குளம் போல மாறியது. மேலும் இடைவிடாமல் தினமும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் காய்கறி செடிகள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் வடிய வழியில்லாமல் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி செடிகள் அழுகி வருகிறது. எனவே வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர் சேதங்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஈரோடு-12, பெருந்துறை-53,கோபி செட்டிபாளையம்-46, தாளவாடி-8.3, சத்தியமங்கலம்-2, பவானிசாகர்-4, பவானி-8.4, நம்பியூர்-7, சென்னிமலை-50, மொடக்குறிச்சி-11, கவுந்தப்பாடி-4.6, எலந்த குட்டை மேடு-11.2, கொடிவேரி-6, குண்டேரி பள்ளம்-4.2, வரட்டுப்பள்ளம்-5, மாவட்டம் முழுவதும் மொத்தம் 232.7 மி.மீ. மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com