search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து- பாலமோர் பகுதியில் 60.4 மி.மீ. மழை
    X

    அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து- பாலமோர் பகுதியில் 60.4 மி.மீ. மழை

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக உள்ளது.
    • அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக வெயிலடித்து வந்த நிலையில் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு 60.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    பேச்சிபாறை அணை பகுதியில் சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகளிலும் அணை பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக உள்ளது. அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 439 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.29 அடியாக உள்ளது. அணைக்கு 478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 நீர்மட்டம் 11.45 அடியாக உள்ளது. அணைக்கு 101 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    3 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 11.84 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.5 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.90 அடியாக உள்ளது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அந்த பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×