search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரியில் பஸ்சில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் கொலை
    X

    புதுச்சேரியில் பஸ்சில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் கொலை

    • வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் குமரன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 46).

    தற்போது கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் என்ற இடத்தில் அவர் புதிதாக வீடு கட்டி வந்தார்.சண்முக சுந்தரம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு சண்முகசுந்தரம் புதுவையில் இருந்து தனியார் பஸ்சில் கண்டமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கும் பஸ்சில் வந்த ஒரு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது. அரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய சண்முகசுந்தரத்தை பஸ்சில் தகராறு செய்த கும்பல் அவரை தலையில் பின் பக்கமாக தாக்கினர் இதில் நிலைத்தடுமாறி சண்முகசுந்தரம் கீழே விழுந்தார்.

    பின்னர் அங்கு கிடந்த கற்களால் சண்முக சுந்தரத்தின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

    இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சண்முகசுந்தரம் இறந்து கிடந்தது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் கொலையான சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு பொருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளது.

    இதனால் கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×