நகை மதிப்பீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை

சீர்காழியில் வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகை மதிப்பீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை
நகை மதிப்பீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சீர்காழி மதினா நகரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில் இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர் கொடுக்கும் நகைகளை வாடிக்கையாளர்கள் அவர்கள் பெயரில் வங்கியில் அடகு வைத்து பணம் கொடுக்க கேட்டு கொண்டார். அதன்பேரில் வாடிக்கையாளர்கள், கலைச்செல்வன் கொடுத்த நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நகைகள் அனைத்தும் போலி என்பதும், ரூ.1 கோடியே 20 லட்சம் வரை மோசடி செய்தது வங்கி அதிகாரிகள் ஆய்வின் போது தெரிய வந்தது.

இதனை அடுத்து நகை மதிப்பீட்டாளர் கலைச்செல்வனுக்கு அடகு வைக்க உதவியதாக கூறி 28 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. இதில் சிலர் ஓய்வு ஊதியம் பெறும் நிலையில் உள்ள முதியவர்களும் உள்ளனர். தங்களுக்கும் இந்த முறை கேட்டும் எந்த தொடர்பும் இல்லை என 28 பேரும் உறுதி அளித்துள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட கலைச்செல்வன் வாடிக்கையாளர்களுக்கு முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

தான் செய்த தவறுக்கு தனது வீட்டை வங்கியின் பெயரில் பிணையாக கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை வங்கி அந்த வீட்டை எதுவும் செய்யாமலும் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்திவிட்டு 28 பேரின் வங்கி கணக்குகளை மட்டும் முடக்கியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நகை மதிப்பீட்டாளர் கலைச்செல்வனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலியாக 300 பவுன் நகைகளை அடகு வைத்த கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வங்கி கணக்குகளை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com