search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சரப்பாக்கத்தில் மழைநீர் கால்வாயுடன் சாலை அமைக்க வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை
    X

    கோப்பு படம்

    அச்சரப்பாக்கத்தில் மழைநீர் கால்வாயுடன் சாலை அமைக்க வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை

    • பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
    • மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 5- வது வார்டு பகுதியில் உள்ளது. வி.ஐ.பி நகர் குடியிருப்பு . இந்த பகுதியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த புதிய குடியிருப்பு பகுதி முறையான சாலை வசதி இல்லாத தாழ்வான இடம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இடுப்பளவிற்கு மேல் மழை தண்ணீர் தேங்கி நிற்கும். பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து,மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சியின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்தில் தார் சாலைகள் மற்றும் 6 சிறு பாலங்களை அமைக்க பணிகள் செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டது . 90 நாட்களுக்குள் பணிகள் முடிவடைய வேண்டும் என திட்ட காலம் தீர்மானித்து டெண்டர் விடப்பட்டது.

    அதன்படி,டெண்டர் விடப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    மேலும், தற்பொழுது தான் ஒரு சாலையின் சந்திப்பு பகுதிகளில் மற்றும் சாலையின் முகப்பு பகுதியில் மழை நீர் செல்லும் 6 சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பகுதியில் திட்டமிட்டபடி கால்வாய்கள் அமைக்காமல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைப்பதால் வரும் மழை காலத்தில் தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டு சாலைகள் பெயர்ந்து முழுவதும் வீணாகி விடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    எனவே மழைநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணியையும் உடனடியாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கும். தண்ணீர் செல்ல வழி இல்லாததால் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி மழை காலங்களில் கடும் சிரமம் அடைந்து வருகிறோம்.

    எனவே இந்த பகுதியில் கால்வாய் அமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஏற்று சாலை மற்றும் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இன்னும் முடிக்கப்படவில்லை.

    மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வி.ஐ.பி. நகர் பகுதியில் முதலில் சாலைகளும், சிறு பாலங்களும் அமைப்பதற்கு தான் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றனர். அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வி. ஐ பி நகரில் குடியிருப்பு பகுதிகளின் தேவைக்கேற்ப கால்வாய் அமைத்து சாலைகள் அமைத்த பின்னர் சிறு பாலங்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    Next Story
    ×