search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி தந்தை -மகன் பலி
    X

    சூலூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி தந்தை -மகன் பலி

    • மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி கொண்டனர்.
    • பஸ்சின் பின் சக்கரம் தங்கவேல், நந்தகுமார் மீது ஏறி இறங்கியது. இதில், 2 பேருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 66). விவசாயி.

    இவரது மகன் நந்தகுமார் (34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நந்தகுமார் அந்த பகுதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நந்தகுமார் இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக தன்னை கருமத்தம்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விடும்படி தனது தந்தையிடம் கூறினார்.

    இதையடுத்து தங்கவேலும், நந்தகுமாரும் வீட்டில் இருந்து கருமத்தம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை தங்கவேலு ஓட்டினார்.

    நந்தகுமார் பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் கிட்டாம்பாளையம் நால்ரோடு பகுதிக்கு வந்தது.

    அங்கு வந்ததும் தங்கவேலு நேரே செல்வதற்காக மற்ற பகுதிகளில் இருந்து வாகனங்கள் ஏதாவது வருகிறதா? என பார்த்த படி நின்றார். அப்போது பொள்ளாச்சியை நோக்கி தனியார் கல்லூரி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் ரோட்டை கடப்பதற்காக நின்ற மோட்டார்சைக்கிள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

    மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி கொண்டனர். இதில் பஸ்சின் பின் சக்கரம் தங்கவேல், நந்தகுமார் மீது ஏறி இறங்கியது. இதில், 2 பேருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காலை நேரம் என்பதால் அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்ற சிலர் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பின்னர் விரைந்து ஓடி சென்று அவர்களை பார்த்தபோது 2 பேருமே இறந்து விட்டது தெரிய வந்தது. உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்த தந்தை, மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை, மகன் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அங்கு அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தந்தை- மகன் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×