விருதுநகர் ஜெயிலில் கைதி மீது தாக்குதல்- 3 பேர் மீது வழக்கு

விருதுநகர் ஜெயிலில் கைதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோதல்
மோதல்
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அதே வழக்கில் சிலம்பரசனின் கூட்டாளிகளான இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சிலம்பரசன் வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்று வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது கூட்டாளிகள் 3 பேரும் தங்களுக்கும் ஜாமீன் பெற்று தருமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு சிலம்பரசன் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இருளாண்டி, வசந்த பாண்டி, இருள் ஆகிய 3 பேரும் ஜெயிலுக்குள் சிலம்பரசனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்தார்.

உயிருக்கு போராடிய அவரை சிறை காவலர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஜெயில் சூப்பிரண்டு தாமரைக்கனி விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் இருளாண்டி, வசந்த பாண்டி, இருள் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com