

மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் தினேஷ் என்ற மண்ட தினேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் நிதிஷ்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரிடம் கஞ்சா கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து இருதரப்பினருப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கைதிகள் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
இந்த மோதலில் சையது இப்ராஹிம் மற்றும் தினேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் இரண்டு பிரிவாக பிரிந்து பயங்கர மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருந்தபோதிலும் கைதிகளுக்குள் நடந்த மோதல் தொடர்பாக சிறை நிர்வாகம் சார்பில் கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே மதுரை மத்திய ஜெயிலில் மேலும் பிரச்சினை ஏற்படாத வகையில், கைதிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.