

மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம், குரும்ப பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சுரேஷ்குமார் (வயது 36). இவர் கொலை வழக்கு ஒன்றில் தண்டனைக்கு உள்ளாகி, மதுரை மத்திய சிறையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி அடைக்கப்பட்டு, அங்கு ஜெயில் வாசம் அனுபவித்து வந்தார்.
இந்தநிலையில் சுரேஷ் குமாருக்கு நேற்று நள்ளிரவு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கி நிறுத்தி, சிறை கம்பிகளை பிடிக்க வைத்தனர். அதன் பிறகு சுரேஷ் குமாரை போலீசார் ஜெயில் வளாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது.
எனவே சிறை வளாக மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் நள்ளிரவு ஒரு மணிக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.