பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து- அண்ணன்-தங்கை பலி

பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் அண்ணன் தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து
விபத்து
Published on

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப் புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27).

இவரது உறவுமுறை சகோதரி ராஜேஸ்வரி(22). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் நாகர்கோவிலில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

அவர்கள் துவரங்காடு பகுதியில் வந்து கொண்டி ருந்த போது அந்த வழியாக வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணிகண்டன் மற்றும் அவரது தங்கை ராஜேஸ்வரி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி மணிகண்டன்,ராஜேஸ்வரி மீது மோதியது. இதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மணிகண்டனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே மணிகண்டனும் பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்த ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் அண்ணன் தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கு காரணமான வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com