

புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ராம்ஜிநகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது48). இவர் சென்னை ஆவடியில் மத்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்கையர்கரசி.
இவர்களுக்கு நிரோசந்திரன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மங்கையர்கரசி இறந்துவிட்டார்.
இதையடுத்து சங்கர் அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு மகன் மற்றும் மகள்களுடன் தங்கியிருப்பார். விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கும் போதெல்லாம் சங்கர் மது குடிப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாக சங்கர் மது குடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் சங்கர் மது குடித்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் வீட்டின் வராண்டாவில் தூங்கினார். நேற்று காலை சங்கர் திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறி மயங்கி சரிந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சங்கர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் நிரோசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.