பணிசுமை காரணமாக அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்த போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்த போது அவர் போனை எடுக்கவில்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஈரோடு:

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ரங்கசாமி பணிக்கு சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்த போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்த போது அவர் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மாடிக்கு சென்று பார்த்த போது அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரங்கசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால் தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com