

தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கடந்த 16-ந்தேதி கறி நாள் என்பதால் கிராமங்களில் பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு என்பதால் கிராம மக்கள் அவர்கள் சொந்த பகுதியிலேயே பல்வேறு போட்டிகள் வைத்து மகிழ்ந்தனர்.
அதே போல் தருமபுரி அடுத்த முக்கல் நாய்க்கன்பட்டியில் ஆண்டுதோறும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி நடைபெறுவது வழக்கம். இதேபால் இந்த ஆண்டும் ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் இளைஞர்களுக்கு பரிசு என அறிவித்து போட்டி நடைபெற்றது.
அதன்படி 15 கிலோ சிக்கன் பொரித்து போட்டியில் கலந்து கொண்ட 15 இளைஞர்கள் ஒரு டேபிளுக்கு 3 பேர் என சமூக இடைவெளியில் அமர்ந்து ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி நடந்தது. அதே போல் பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடந்தது. இந்த போட்டியில் 21 இளைஞர்கள் கலந்துகொண்டு சிக்கன் மற்றும் பிரியாணியை உற்சாகமாக சாப்பிட்டனர்.
இதற்கிடையே இந்த போட்டி குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முக்கல்நாயக்கன்பட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் கொரோனா ஊரடங்கு தடையை மீறி போட்டி நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழா நடத்தியவர்கள் மற்றும் கலந்து கொண்ட இளைஞர்கள் என மொத்தம் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.