search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருந்துறை அருகே 10 ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு
    X

    பெருந்துறை அருகே 10 ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு

    • முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரிய வந்தது.
    • ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் செல்லப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 54). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 24 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து தூங்க சென்று விட்டார்.

    பின்னர் இன்று காலை செல்லப்பன் பட்டியை பார்த்தபோது பட்டியில் இருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 4 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. பின்னர் இது குறித்து திங்களூர் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும் போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரிய வந்தது. வனத்துறையினர் அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

    மேலும் காயம் அடைந்த 4 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என செல்லப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வனத்துறையினர் இந்தப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று அம்மாபேட்டை அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தது. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்தது. தொடர்ந்து மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×