இரணியல் அருகே கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு- பொதுமக்கள் போராட்டம்

கோழி கழிவுகளுடன் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையோரம் டெம்போ நிறுத்தி வைக்கப்பட்டது. டெம்போவை களியக்காவிளை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இரணியல் அருகே கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு- பொதுமக்கள் போராட்டம்
Published on

இரணியல்:

கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கேரளா மாநிலம் பாறசாலையில் இருந்து டெம்போ குமரி மாவட்டத்திற்கு வந்தது. அந்த டெம்போ வரும்போது சாலை முழுவதும் நீர் வடிந்தவாறு சென்றது. அந்த டெம்போ செல்லும்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த டெம்போவை வாலிபர்கள் சிலர் பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். இரணியல் அருகே வில்லுக்குறி பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுடன் சேர்ந்து அந்த டெம்போவை சிறை பிடித்தனர்.

இது குறித்த தகவல் பரவியதும் அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். அதேபோன்று நாம் தமிழர் கட்சியினரும் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார், வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் ராமு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். களியக்காவிளை சோதனை சாவடியை தாண்டியே இந்த கழிவு ஏற்றி வரும் லாரிகள் வருகிறது. அங்குள்ள சோதனை சாவடியில் உள்ள போலீசார் ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கழிவு ஏற்றி வந்த டெம்போவிற்கு பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து, டெம்போவை களியக்காவிளை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனால் கோழி கழிவுகளுடன் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையோரம் டெம்போ நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனிடையே டெம்போவிற்கு அபராதம் விதிக்க வேண்டும். கோழி கழிவுகளுடன் டெம்போவை குமரி எல்லை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் விடிய விடிய அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com