

கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியை சேர்ந்த அலமேலுபுரத்திற்கு உட்பட்ட கோட்டமேடு, அசோக்நகர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
தேவையான குடிநீர் பைப், சாக்கடை கால்வாய் பராமரிப்பு, ரோடு வசதி, தெருவிளக்கு ஆகியவை அமைத்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். மேலும், அவர்கள் நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.
இதுகுறித்து 3-வது வார்டு கவுன்சிலர், பேரூராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.
முறையான நடவடிக்கை எடுக்கும் வரை வீடுகளில் கருப்பு கொடியேற்றி வைப்போம் என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.