search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு காதல் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்
    X

    பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு காதல் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்

    • இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார்.
    • ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்பிச்சி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ரூபிணி ( வயது 24). பல்லடம் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (24) . இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்தநிலையில் ரூபினியின் சகோதரி கணவர், கடந்த பிப்ரவரி மாதம் ராஜா மற்றும் ரூபிணி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

    சென்னை பேரூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்ததால் ரூபிணியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் ரூபிணியின் கையை உடைத்துள்ளார்.

    நேற்று இரவு சென்னையில் இருந்து பல்லடம் கரைப்புதூருக்கு ரூபிணியை ராஜா அழைத்து வந்தார். அங்கு வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    இதனால் ரூபிணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவசர தொலைபேசி எண் மூலம் போலீசாரை வரவழைத்தார். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த ரூபிணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் இது குறித்து ரூபிணி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×