search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து பெயிண்டர் கழுத்து அறுத்து கொலை
    X

    மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து பெயிண்டர் கழுத்து அறுத்து கொலை

    • ரகுநாத்தை கொலை செய்த வெள்ளையன் மற்றும் அவனது கூட்டாளிகளான பிரபல ரவுடி மூர்த்தி, பிரகாஷ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மூர்த்தி மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாத் (வயது 29). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளையன் என்கிற மாரி கவுண்டர் (37). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கைக்கலப்பாக மாறியதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதனால் காயமடைந்த ரகுநாத், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று இரவு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை ஆஸ்பத்திரி நர்சுகள் செய்து வந்தனர்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற வெள்ளையன் மற்றும் அவரது கூட்டாளிகளான மேட்டூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (36), மேட்டூர் நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) ஆகியோர் மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ரகுநாத்தை, கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தனர். இதனால் ரத்த வெள்ளத்தில் ரகுநாத் அங்கே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரபல ரவுடி வெள்ளையன் உள்பட அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார், மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த நோயாளிகளிடம் கொலை குறித்து விசாரித்தனர்.

    இதையடுத்து, ரகுநாத்தை கொலை செய்த வெள்ளையன் மற்றும் அவனது கூட்டாளிகளான பிரபல ரவுடி மூர்த்தி, பிரகாஷ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மூர்த்தி மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ரவுடி பட்டியலிலும் உள்ளார். தற்போது மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கொலையுண்ட ரவுடி ரகுநாத்துக்கு மனைவியும், 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் கணவரின் உடலை பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    Next Story
    ×