

ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்தி சாலை பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் விக்னேஷ் (வயது 22). இவருக்கு ஒரு வயதில் ஹதீஜா என்ற ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கதிஜா வயிற்று வலியால் அழுது கொண்டிருந்தார். பின்னர் அவரை விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹதீஜா மூச்சு விட சிரமப்பட்டதால் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹதீஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து விக்னேஷ் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வயது பெண் குழந்தை வயிற்று வலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.