ஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் உடல் கருகி பலி

கியாஸ் சிலிண்டர் வெடித்தபோது அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் போல் கேட்டு உள்ளது. வீட்டில் கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் கோபால் தீயை பற்ற வைத்ததால் கியாஸ்சி லிண்டர் வெடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆவடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் உடல் கருகி பலி
Published on

திருநின்றவூர்:

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபால் (வயது66). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன்கள் 2 பேர் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கோபால் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தார். அவரை மகன்கள் அடிக்கடி பார்த்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கோபால் வீட்டில் இருந்த போது பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் கோபால் சிக்கி அலறினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயில் சிக்கி உடல் கருகிய கோபாலை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கோபால் பரிதாபமாக இறந்தார். கியாஸ் சிலிண்டர் வெடித்தபோது அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் போல் கேட்டு உள்ளது. இந்த அதிர்வில் கோபாலின் வீட்டில் இருந்த கதவு, ஜன்னல்கள் சேதம் அடைந்தன. மேலும் வீட்டில் இருந்த சிமெண்டு பலகை தூக்கி வீசப்பட்டதில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றும் சேதம் அடைந்தது.

சம்பவ இடத்தை ஆவடி உதவி கமிஷனர் புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் கோபால் தீயை பற்ற வைத்ததால் கியாஸ்சி லிண்டர் வெடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com