

தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபர் நேற்று மாலை சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரது பின்னால் சென்ற வடமாநில வாலிபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்தனர். அப்போது செல்போனை பறிகொடுத்த வாலிபர் மற்றும் 4 பேர் சேர்ந்து வடமாநில வாலிபரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில வாலிபரை நள்ளிரவில் அந்த கும்பல் மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வந்தது. பின்னர் அவரது கை, கால்களை கட்டி மீண்டும் சரமாரியாக தாக்கி விட்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொது கழிப்பிடம் அருகே அவரை வீசிசென்றனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நமன்முண்டா (35) என்பதும், வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இவர் யாரிடம் செல்போனை பறிக்க முயன்றார்? இவரை தாக்கியவர்கள் யார்- யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.