search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு- ஈரோடு மாவட்டத்தில் 700 பேர் முகாம்களில் தங்கவைப்பு

    • அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, மீனவர் வீதி, பாரதியார் வீதி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூர் நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 50 கிராமங்களுக்கு குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக நேற்று மாலை 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி ஆகிய பகுதிகள் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, மீனவர் வீதி, பாரதியார் வீதி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அம்மாபேட்டை அருகே உள்ள கோம்பூர் நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் 50 கிராமங்களுக்கு குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கருங்கல்பாளையம் பகுதியிலும் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. பவானி நகரம் காவிரி ஆற்று வெள்ளத்தால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையை தாண்டி தண்ணீர் செல்கிறது. மேலும் பவானி காவேரி வீதி, கந்தன்பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, பாலக்கரை வீதி, வெந்தலை படிக்கட்டு, கீழக்கரை வீதி உள்பட பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

    மேலும் பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பவானி வாரச்சந்தை ரோடு பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடை பகுதியில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் செல்வதால் தகனமேடை மூடப்பட்டுள்ளது.

    தற்போது காவிரி ஆற்றுடன் பவானி ஆற்று நீரும் கலப்பதால் கூடுதுறை பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கரையோர பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கொடுமுடி இலுப்பைத்தோப்பு, வடக்குத்தெரு, சத்திரப்பட்டி, காவேரி கரை, ராகவேந்திரா வீதி, வைராபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் 700 பேர் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    தீபாவளி பண்டிகை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

    Next Story
    ×