search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமாகி 5 நாட்களில் விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை
    X

    கொலை செய்யப்பட்ட முத்தரசனையும், சரணடைந்த மாமனார் ரவிச்சந்திரனையும் படத்தில் காணலாம்.


    திருமணமாகி 5 நாட்களில் விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

    • முத்தரசன் திருமணத்திற்கு முன்பே குடிபோதையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் அரவிந்தியா ஆகியோரிடம் தகராறு செய்து ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • தற்போது திருமணத்திற்கு பிறகும் குடிபோதையில் தகராறு செய்வதை மாமனார் கண்டித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீராபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சிற்றரசன். இவரது மகன் முத்தரசன். முத்தரசன் நிரந்தர வேலை இன்றி டிரைவர் உள்ளிட்ட கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

    இவருக்கு மங்களநாயகிபுரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் அரவிந்தியா(25) என்ற பெண்ணுடன் கடந்த 13-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் நேற்று முத்தரசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு விருந்திற்கு வந்துள்ளார். அப்போது முத்தரசன் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. முத்தரசன் திருமணத்திற்கு முன்பே குடிபோதையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் அரவிந்தியா ஆகியோரிடம் தகராறு செய்து ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தற்போது திருமணத்திற்கு பிறகும் குடிபோதையில் தகராறு செய்வதை மாமனார் கண்டித்துள்ளார். அதனை முத்தரசன் கேட்கவில்லையாம். இதனால் இவர் மீது மாமனார் ரவிச்சந்திரன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு தனது மாமனார் ரவிச்சந்திரன் வீட்டின் வெளியே முத்தரசன் நின்று கொண்டு இருந்த போது ரவிச்சந்திரன் தனது மருமகனை அரிவாளால் வெட்டியுள்ளார். சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே முத்தரசன் இறந்தார். இதையடுத்து ரவிச்சந்திரன் தலைமறைவானார்.

    இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தனது மருமகனை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக கூறி ரவிச்சந்திரன் போலீசில் சரணடைந்துள்ளார். போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 5 நாட்களில் புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×