

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சரவணன் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் ஏற்பட்டுள்ளதால் மாணவர் சரவணன், விமானம் மூலமாக உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் அங்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சரவணன் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பமுடியாமல் அங்கு தவித்து வருகின்றார். இதனால் சரவணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நாமக்கல் மாணவன் உள்பட அங்குள்ள இந்தியர்களை மீட்டு, சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் எம்.பி. சின்ராஜ் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.