

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. கோட்டார் வல்லன்குமாரன்விளை பள்ளி பின்புறம் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற சிலரை போலீசார் பிடித்தனர் அதில் சிலர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார்கள் பிடிப்பட்டவர்களை கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது19), அரவிந்த் (19), கோகுல், சரக்கல்விளையை சேர்ந்த சஞ்சய், தனுஷ், பிரதீப் ராஜா, பாலு ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் மாணவர்கள் ஆவர். அவர்களிடம் நடந்த விசாரணையில் அதிகமான மாணவர்கள் தற்போது இந்த போதை மாத்திரைகளை பயன்படுத்துவது தெரிய வந்திருக்கிறது. இவர்களுக்கு எங்கிருந்து மாத்திரைகள் மொத்தமாக கிடைத்தன? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.