search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் அருகே விபத்து... மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தாய், மகன் பலி
    X

    காரிமங்கலம் அருகே விபத்து... மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தாய், மகன் பலி

    • ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    காரிமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 34). இவர்களுக்கு சரண் (14), தீரன் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஜோதி பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் தனது கணவர், மகன்களுடன் அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருப்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அப்போது ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோதி, இளைய மகன் தீரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறத்தனர்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து படுகாயம் அடைந்த சரணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த தாய்-மகன் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதியமான்கோட்டை-ஓசூர் வரை தற்போது 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி அதிக வேகத்தில் வந்துள்ளது. மேலும் சாலையில் போடப்படும் சென்டர் வெள்ளை கோடு இன்னும் போடப்படாத காரணத்தால் டிரைவர் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதி இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    விபத்தில் தொழிலாளியின் மனைவியும், மகனும் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×