search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி
    X

    நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

    • மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஜான் பால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
    • விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் ஜான் பால் (வயது 37). இவரது மனைவி கனிஷ்கா.

    ஜான்பால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4-ந்தேதி நெல்லையில் இருந்து இவர், மோட்டார் சைக்கிளில் மணிமுத்தாறுக்கு சென்று கொண்டிருந்தார். முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஒருவர் வந்ததால் திடீரென ஜான்பால் பிரேக் பிடித்துள்ளார்.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஜான் பால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜான்பால் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஜான்பால் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கிருந்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பொருத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை டீன் ரேவதி தலைமையில் மருத்துவமனை டாக்டர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×