திண்டுக்கல் அருகே பழனிக்கு பாதயாத்திரை வந்த பக்தர் விபத்தில் பலி

தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.
திண்டுக்கல் அருகே பழனிக்கு பாதயாத்திரை வந்த பக்தர் விபத்தில் பலி
Published on

திண்டுக்கல்:

விருதுநகர் அருகே உள்ள சத்திரப்பட்டி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 45). இவர் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.

நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது பக்தர்கள் கூட்டத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதில் அவர்கள் அனைவரும் சிதறி ஓடினர். ரெங்கராஜன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரெங்கராஜன் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பக்தர்கள் ஆபத்தான முறையில் பாத யாத்திரை செல்கின்றனர். போலீசார் இது போன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com