

திருச்சி:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சியில் இன்று தி.மு.க. வேட்பாளரை கண்டித்து தாய் மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநகராட்சி 36-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில், தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் கார்த்திகேயன். இவர் ஜெயமோகன் என்பவருடன் கூட்டு சேர்ந்து திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை செய்து வந்துள்ளார்.
இதில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் ரூ.12 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறி, பாதிக்கப்பட்ட ஜெயமோகன் தனது தாயார் ஜெயாவுடன், திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக இன்று தீக்குளிக்க முயற்சித்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் தடுத்து கைது செய்து அழைத்து சென்றனர்.