நிலக்கோட்டை அருகே மாயமான 3 பள்ளி மாணவர்கள் மீட்பு- கடத்தப்பட்டார்களா? என விசாரணை

மாணவர்கள் வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் மாணவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
மீட்கப்பட்ட மாணவர்கள்
மீட்கப்பட்ட மாணவர்கள்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் விவாஷ் (12). அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பரத்பாண்டி (12), ஜங்கால்பட்டியை சேர்ந்த ராஜா மகன் சக்திவேல் (10). இதில் விவாஷ் மற்றும் பரத்பாண்டி ஆகிய 2 பேரும் மைக்கேல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சக்திவேல் அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் தினந்தோறும் பள்ளிக்கு ஒன்றாக சென்று மாலையில் ஒன்றாக திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இரவு 11 மணிவரை மாணவர்கள் வீட்டிற்கு வராததால் இதுகுறித்து அவர்களது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் மாணவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேட்டுப்பட்டி, நிலக்கோட்டை, கொடைரோடு சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களிலும் தேடினர். தற்போது பழனிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வதால் அவர்களுடன் சென்று விட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி தேடினர்.

இந்நிலையில் இரவில் மேட்டுப்பட்டி சமுதாயக்கூடத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரித்தனர். கடந்த மாதம் சின்னாளபட்டியில் 2 பள்ளி மாணவர்களை பைக்கில் வந்த வாலிபர் கடத்தி செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை துரத்திப்பிடிக்க முயன்றனர். இதனால் மாணவர்களை கொடைரோடு டோல்கேட் முன்பு இறக்கிவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். அதே போல் இந்த மாணவர்களையும் யாரேனும் கடத்திச் செல்ல முயன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com