search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பேரை திருமணம் செய்த பானி பூரி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
    X

    3 பேரை திருமணம் செய்த பானி பூரி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

    • சாப்பாடு தரக்கூட யாரும் முன்வராததால் ராஜேந்திரன் பெரிதும் விரக்தியடைந்தார்.
    • ஒரு நாள் வியாபாரத்திற்கு செல்லும் அவர் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக மது குடிக்க செலவழித்தார். இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). பானி பூரி வியாபாரியான இவர் திருவிழா காலங்களில் தனது உறவினர்களுடன் சேர்ந்து கூடுதல் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் ஆசைக்கு ஒன்று, அழகுக்கு ஒன்று, அந்தஸ்துக்கு ஒன்று என அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா, செல்வி, சித்ரா ஆகிய 3 பேரை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் செல்விக்கு ஒரு மகன், ஒரு மகளும், சித்ராவுக்கு ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் வளர்ந்து ஆளாகி திருமணத்திற்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே மதுவுக்கு அடிமையான ராஜேந்திரன் பானி பூரி வியாபாரம் செய்து கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை குடித்தே அழித்து வந்தார். இதனால் 3 மனைவிகளுக்கும் குடும்பம் நடத்த சரியாக பணம் கொடுப்பதில்லை. இதனால் ராஜேந்திரனை முதலில் திருமணம் செய்து கொண்ட சகுந்தலா கணவரை பிரிந்து, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.

    அப்போது முதலே மற்ற இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகள் ராஜேந்திரனை வெறுக்க தொடங்கினர். நாளுக்கு நாள் முழு நேரமும் மது போதையில் திளைத்த ராஜேந்திரனை அவரது 2 மனைவிகள் மற்றும் உறவினர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை.

    மேலும் சாப்பாடு தரக்கூட யாரும் முன்வராததால் ராஜேந்திரன் பெரிதும் விரக்தியடைந்தார். ஒரு நாள் வியாபாரத்திற்கு செல்லும் அவர் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக மது குடிக்க செலவழித்தார். இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

    ஒரு வேளை உணவுக்கும் வழியின்றி, அனைவரும் வெறுத்து ஒதுக்கியதால் மனம் உடைந்த ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி குன்னத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து, அதனுடன் விஷம் கலந்து குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    3 மனைவிகள், பிள்ளைகள் இருந்தும் ஒருவேளை உணவு கூட தராமல் குடும்பத்தினர் ஒதுக்கியதால் மனமுடைந்த பானி பூரி வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×