

சென்னை:
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த தூத்துக்குடி விமானத்தில், ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா தனது பெற்றோருடன் பயணித்துள்ளார். அப்போது, பா.ஜ.க. ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பியதாகவும், அதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
சோபியாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சோபியாவின் தந்தை மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் சோபியாவுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் புது உற்சாகத்தை வழங்கியிருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இந்த உத்தரவை மனமார வரவேற்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.