search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் மத்திய அரசு வக்கீல் ஆஜராகலாம்-  ஐகோர்ட்டு உத்தரவு
    X

    டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் மத்திய அரசு வக்கீல் ஆஜராகலாம்- ஐகோர்ட்டு உத்தரவு

    • மனுதாரர் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான எஸ்.வி.ராஜூ ஆஜரானார்.
    • டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., சார்பில் புகார் செய்யப்பட்டது.

    இந்த புகாரை விசாரித்த போலீசார், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம், தி.மு.க., தொடர்ந்த பொதுநல வழக்குகள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், தன் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான எஸ்.வி.ராஜூ ஆஜரானார். அப்போது, டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு தனி நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்ய வேண்டும். வேலுமணிக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராக முடியாது என்று கூறப்பட்டு இருந்தது.

    பின்னர் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசின் தரப்பு வக்கீல், வேலுமணிக்கு ஆதரவாக எப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும்? என்று கேள்வி எழுப்பி வாதிட்டார்.

    மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது நெருங்கிய உறவினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் டெண்டர்களை ஒதுக்கியதின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    அப்போது, வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.வி. ராஜூ, இந்த வழக்கில் ஆஜராக மத்திய அரசின் அனுமதியை முறையாக பெற்றுள்ளேன். அறப்போர் இயக்கத்தின் பொதுநல மனு மற்றும் ஆர்.எஸ்.பாரதியின் குற்றவியல் மனு ஆகியவைகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய கோரும் வேலுமணியின் வழக்கையும் சேர்த்து இந்த முதல் அமர்வே விசாரிக்கலாம் என்று வாதிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சேபனை மனு மீதான உத்தரவை இன்று பிறப்பிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த உத்தரவை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர். அதில், டெண்டர் முறையீடு வழக்கில் வேலுமணி சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர் ஆகலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

    Next Story
    ×