கோவை அருகே நள்ளிரவில் விபத்து- லாரி மோதி 43 ஆடுகள் பலி

கோவை சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. திடீரென அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறு ஓடியது.
லாரிக்கு அடியில் சிக்கி இறந்து கிடக்கும் ஆடுகளை படத்தில் காணலாம்.
லாரிக்கு அடியில் சிக்கி இறந்து கிடக்கும் ஆடுகளை படத்தில் காணலாம்.
Published on

செட்டிபாளையம்:

கோவை சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ஆடுகள் வாங்கி வளர்க்க முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று கேரளாவுக்கு லட்சுமணன் சென்றார்.

அங்கு சந்தையில் 400 ஆடுகளை வாங்கினார். பின்னர் லட்சுமணன் மற்றும் நாகராஜ், ஆறுமுகம், முத்து ஆகியோருடன் கேரளாவில் இருந்து சூலூர் நோக்கி சாலை வழியாக ஆடுகளை மேய்ச்சலில் விட்டபடியே அழைத்து வந்தனர்.

நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் ஆடுகள் வேலாந்தவாளம் நாச்சிபாளையம் சாலையில் வழுக்கல் வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கோவை சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது.

திடீரென அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறு ஓடியது. சிறது நேரத்தில் ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்த லாரி ஆடுகள் மீது பயங்கரமாக மோதியது. லாரி வருவதை பார்த்தும் ஆடுகள் அங்குமிங்கும் சிதறி ஓடி, காட்டுக்குள் புகுந்தது.

இருப்பினும் இந்த விபத்தில் 43 ஆடுகள் லாரியின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டன. மேலும் 15 ஆடுகள் காயம் அடைந்தது.

இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டிவந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை. இதுகுறித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஆடுகளை ஒட்டிவந்தவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கேரள மாநிலம் ஒத்தபாலத்தை சேர்ந்த முகமது என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com