ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை முடிக்கலாமா?- சசிகலா வக்கீல்களுடன் நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் யாரிடமாவது விசாரணை நடத்த வேண்டுமா? போதுமா என்று விளக்கம் கேட்பதற்காக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஜெயலலிதா
ஜெயலலிதா
Published on

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் கடந்த 2 வருடத்திற்கு மேலாக பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டது.

நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை காலமும் நீட்டிக்கப்பட்டது. ஆணையத்தில் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

கடந்த வாரம் இறுதி கட்டமாக அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சசிகலா தரப்பில் வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.

இறுதியாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்கப்பட்டது. ஆணைய வக்கீல் மற்றும் சசிகலா தரப்பு வக்கீல்கள் கேட்ட கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். 2 நாட்கள் ஆஜராகி பதில் அளித்தார்.

அதனை தொடர்ந்து விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது. ஆணையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவையெல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் யாரிடமாவது விசாரணை நடத்த வேண்டுமா? போதுமா என்று விளக்கம் கேட்பதற்காக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சசிகலா தரப்பு வக்கீல்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை வக்கீல்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் விசாரணை நிறைவு செய்வது குறித்து நீதிபதி கேட்டார்.

இதுவே கடைசி கூட்டமாக இருக்கலாம். மேலும் விசாரணை தேவை இல்லை என்றே இருதரப்பிலும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com