பட்டுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா. இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பழனிவேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் சுரேந்தர் சென்னையில் படித்து வருகிறார்.

சம்பவத்தன்று ஸ்ரீபிரியா வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை திருடுபோனது. இது குறித்து அவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் லெட்சத்தோப்பு இரட்டைச்சாலை பகுதியில் சந்தேகத்திற்குரிய கார் ஒன்று நிற்பதாக, சிலர் பட்டுகோட்டை நகர குற்றப்பிரிவில் வேலைப் பார்க்கும் தலைமை ஏட்டு தர்மராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக, தன்னுடன் காவலர் சுரேந்தர் என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்தில் ஒரு பெட்டிகடையில் மறைந்து நின்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் காரில் இருந்து 50 மீட்டர் தள்ளி வாகனத்தை நிறுத்தி விட்டு, இருவர் இறங்கினர். மற்றொருவர் தப்பி சென்று விட்டார். இருவரும் இறங்கி கொண்டனர்.

இதையடுத்து அந்த 2 பேர் காரை நோக்கி வேகமாக சென்றபோது அங்கு மறைந்து இருந்த தலைமை காவலர் தர்மராஜ், சுரேந்தர் ஆகியோர் உடனடியாக ஓடி சென்று காரின் சாவியை கையில் எடுத்துவிட்டு அவர்களை உள்ளே இருக்கும்படி எச்சரித்தனர். பின்னர் காரின் டிக்கியை திறந்து உள்ளே இருந்த பேக்கினை எடுத்து திறந்து பார்த்த பொழுது, சமீபத்தில் பெருமாள் கோவில் பகுதி ஆசிரியர் வீட்டில் திருடப்பட்ட பொருட்கள் சில அதில் இருந்து உள்ளது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் , குற்றவாளிகள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்.

மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். விசாரணை முடிவில் அந்த 2 பேர் யார்? அவர்கள் எங்கெல்லாம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்? தப்பி ஓடியவர் யார்? போன்ற பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com