துறையூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

துறையூர்:

துறையூர் அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் மணிகண்டன் (வயது29). டிராக்டர் உரிமையாளர். இவரது மனைவி இலக்கியா. இவர் கரட்டாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மணிகண்டன் ரெங்கநாதபுரத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு 8 பவுன் நகைகள், 17 ஆயிரம் ரொக்கம் மற்றும் எல்இடி டிவி ஆகியன திருடு போயிருந்தது தெரியவந்தது.

அதே போல் மருவத்தூர் சாலையில் உள்ள கணேசன் என்பவரது வீட்டின் உள்ளே புகுந்த மர்மநபர்கள் 3 ஆயிரம் பணம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களை திருடி சென்றுள்ளனர்.

இதே போல் இவர் வீட்டின் அருகே வசிப்பவர் சேகர். இவரது வீட்டின் உள்ளே சென்ற மர்மநபர்கள், திருட முயற்சிக்கும் போது ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழங்கு பதிவு செய்து சம்பவம் நடந்த வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், துறையூர் பகுதியில் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவதால் ஒருவித அச்சத்துடனே வாழ வேண்டியுள்ளது.

வீட்டை பூட்டிவிட்டு முக்கியமான இடங்களுக்கு செல்லவே பயமாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை தேடிவருகிறோம். விரைவில் மர்ம நபர்களை பிடித்துவிடுவோம் எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com