ஜெயலலிதா நினைவிடம் அருகே அ.தி.மு.க-அ.ம.மு.க. தொண்டர்கள் மோதல்: எடப்பாடி பழனிசாமி கார் மறிப்பு

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் காரை சுற்றி நின்று கொண்டனர். அப்போது அந்த இடத்தில் அ.தி.மு.க.-அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு
தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு
Published on

சென்னை:

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா  நினைவிடத்தில் இன்று காலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் புறப்பட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை எதிர்பார்த்து அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக நின்றிருந்தனர். அப்போது நினைவிடத்துக்கு வெளியே கடற்கரை சாலையில் சசிகலா, டி.டி.வி.தினகரனை எதிர்பார்த்து அ.ம.மு.க. தொண்டர்களும் காத்திருந்தனர்.

நினைவிட வாயில் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் கார் வந்தபோது அ.ம.மு.க. நிர்வாகிகள் அவரது காரை மறித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். அப்போது அ.தி.மு.க. தொண்டர்களும் பதிலுக்கு எடப்பாடி வாழ்க என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் காரை சுற்றி நின்று கொண்டனர். அப்போது அந்த இடத்தில் அ.தி.மு.க.-அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் விலக்கி விட்டு எடப்பாடி பழனிசாமியின் கார் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிதுநேரம் பதட்டமான சூழல் காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com