search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதா மரணத்தில் தொடர்பு- சசிகலா மீது ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    ஜெயலலிதா மரணத்தில் தொடர்பு- சசிகலா மீது ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

    • ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே.
    • அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேசமாட்டார்கள்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினரும் பொது மக்களும் அவர் இறந்த உடனேயே குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தற்போது தாக்கல் செய்து உள்ளது.

    அதில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்பட சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க முன் வராதது குறித்தும் பல்வேறு சந்தேகங்களை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படி தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக மாலைமலர் நிருபருக்கு தீபா அளித்த பேட்டி வருமாறு:-

    எனது அத்தை ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது அவர் மரணம் அடைந்த உடனேயே மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. பொதுமக்களும் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது எப்படி? எந்த மாதிரி நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் என்ன? என்பவற்றையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சசிகலா மீதும் ஓ.பன்னீர் செல்வம் மீதும் அப்போது இருந்த அமைச்சர், அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி இருக்கிறது. எனவே இதில் தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

    காவல்துறையை பொறுத்தவரையில் சசிகலாவுக்கு தற்போது இருக்கும் அதிகாரிகள் பலரும் நெருக்கமானவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவரது அதிகாரம் அப்படிப்பட்ட அதிகாரமாக இருந்தது.

    எனவே இதையெல்லாம் ஆலோசித்து நேர்மையான காவல்துறை அதிகாரியை நியமித்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நடத்த வேண்டும்.

    ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே. அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேச மாட்டார்கள். நமது நாட்டில் பல தலைவர்கள் இதற்கு முன்பு உயிர் இழந்து உள்ளனர்.

    எம்.ஜி.ஆர்., கருணாநிதி என அனைவரது மரணமும் இயற்கையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். மரணமடைந்த நேரத்தில் இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வசதி கிடையாது. இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? எந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்தனர்.

    வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அது போன்று சசிகலாவும் அவரால் கோடி கோடியாக சம்பாதித்த அ.தி.மு.க. தலைவர்களும் ஏன் ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை.

    ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அப்போது இருந்த ஆட்சியாளர்களுக்கும், உடன் இருந்த சசிகலாவுக்கும் உண்டு.

    திட்டமிட்டு சூழ்ச்சி செய்து எனது அத்தை உயிர் இழப்பதற்கு அவரை சுற்றி இருந்தவர்களே காரணமாக இருந்துள்ளனர்.

    ஜெயலலிதாவிடம் அளித்த உறுதி மொழியை மீறி அவரது இருக்கையில் அமர்வதற்கு சசிகலா ஆசைப்பட்டார். இதன் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும்.

    எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக அரசு வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது எதற்காக? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர்தானே முதல்-அமைச்சராக இருந்தார். எனவே அவரும் ஜெயலலிதாவின் மரணத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    இந்த விஷயத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள் அனைவரும் கடமை தவறி இருப்பது ஆணையத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

    அ.தி.மு.க.வை வளர்ப்பதற்கு ஜெயலலிதா செய்த தியாகங்கள் எதையும் அவரால் பயனடைந்தவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்படி நினைத்து பார்த்திருந்தால் அவரது உயிரை நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.

    தற்போது சசிகலா தவறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஏன் எங்களை எல்லாம் பார்க்க விடவில்லை. நாங்கள் அவரை நெருங்க கூட முடியவில்லை. இதற்கு சசிகலாவும் அவருடன் இருந்தவர்களுமே காரணம்.

    எனவே மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பு சசிகலாவுக்கே உள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது மிகப்பெரிய நாடகமாகும். பன்னீர்செல்வத்தை வெளியேற்றி விட்டு எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து நாடகமாடுகிறார்.

    ஓ.பி.எஸ் வழியே சென்று சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் இருவருமே சேர்ந்து நாடகம் ஆடுவது உறுதியாகியுள்ளது. மக்கள் ஏமாளிகள் அல்ல.

    எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை. முதுகில் குத்தும் இந்த அரசியல் வேண்டாம் என்றுதான் நான் ஒதுங்கி இருக்கிறேன்.

    அத்தையின் மரண விவகாரத்தில் கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆணைய அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அத்தையின் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.

    Next Story
    ×