வீட்டின் உரிமையாளர் 'பாஸ்போர்ட்டை' கொடுக்காததால் சென்னை பெண் திரும்புவதில் தாமதம்- கணவர் தகவல்

புவனா தற்போது சித்ரவதைக்குள்ளான வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். புவனா தனியார் ஏஜெண்டுகளின் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதாக என்னிடம் செல்போனில் பேசினார்.
வீட்டின் உரிமையாளர் 'பாஸ்போர்ட்டை' கொடுக்காததால் சென்னை பெண் திரும்புவதில் தாமதம்- கணவர் தகவல்
Published on

ராயபுரம்:

தண்டையார்பேட்டை, கருணாநிதிநகர், 4-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவரது மனைவி புவனா (வயது 37). இவர் வீட்டு வேலைக்காக கடந்த 8 மாதத்துக்கு முன்பு குவைத்துக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புவனா தனது கணவருக்கு செல்போனில் வீடியோ ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தன்னை கழிவறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக கதறி அழுதார். மேலும் தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ்பால், குவைத்தில் சிக்கி சித்ரவதைபடும் மனைவி புவனாவை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே குவைத்தில் உள்ள தனியார் ஏஜென்டுகளிடம் புவனா குறித்து தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த புவனாவை மீட்டனர். பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

எனினும் புவனாவின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே அந்த வீட்டின் உரிமையாளர் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் புவனா சென்னை திரும்புவது தாமதமாகி உள்ளது. பாஸ்போர்ட்டை பெற தனியார் ஏஜெண்டுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புவனாவின் கணவர் ஜேம்ஸ்பாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

புவனா தற்போது சித்ரவதைக்குள்ளான வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். அவர் தனியார் ஏஜெண்டுகளின் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதாக என்னிடம் செல்போனில் பேசினார்.

ஆனால் அவர் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் புவனாவின் பாஸ்போட்டை வைத்து உள்ளார். அதனை இன்னும் பெறவில்லை. பாஸ்போர்ட் கிடைத்ததும் மனைவி புவனா சென்னை திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com