search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் இடி-மின்னலுடன் கனமழை
    X
    ஈரோட்டில் பெய்த மழையால் சூரம்பட்டிவலசு பெரும்பள்ளம் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.

    ஈரோட்டில் இடி-மின்னலுடன் கனமழை

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் மழைநீர் புகுந்தது.
    • இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறாவளியுடன் விடிய, விடிய மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேப்போல் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் மின் தடையும் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு மாநகர் பகுதியில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    சுமார் 1½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் மாநகர் பகுதி முழுவதும் வெள்ள காடானது. ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு இடங்களில் தற்போது திட்ட பணிகள் நடந்து வருவதால் அதற்காக தோண்டப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இங்கு லேசான மழை பெய்தாலே சேறும் சகதியுமாக காட்சி அளிப்பது தொடர்கதையாகி வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேபோல் கவுந்தபாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 63.8. மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி வழிகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வரட்டுப்பள்ளம்-63.8, ஈரோடு-46, கவுந்தப்பாடி-44.20, பவானிசாகர்-14.4, பெருந்துறை-10, தாள வாடி-3, சென்னிமலை, கோபி-1.

    Next Story
    ×