search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரூப் 2 தேர்வு தொடங்குவதில் தாமதம்- கூடுதல் நேரம் ஒதுக்க ஆணையர் உத்தரவு
    X

    குரூப் 2 தேர்வு தொடங்குவதில் தாமதம்- கூடுதல் நேரம் ஒதுக்க ஆணையர் உத்தரவு

    • விழுப்புரம் நகரில் 13 மையங்களில் 2450 பேர் குரூப் 2 தேர்வு எழுதினார்கள்.
    • விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தேர்வெழுதியவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    பல்வேறு துறைகளில் குரூப் 2 பிரிவுகளில் உள்ள 5446 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்தில் 9,94,890 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 55,071 பேர் முதல் நிலை தேர்வில் தகுதி பெற்றனர்.

    அதனை தொடர்ந்து முதன்மைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் 186 மையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் 13 மையங்களில் 2450 பேர் தேர்வு எழுதினார்கள். இன்று காலை தமிழ் தகுதி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதனை தேர்வாணையத் தலைவர் முனியநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தேர்வெழுதியவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. இவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்றும், எங்கெல்லாம் தேர்வுகள் காலதாமதமாக தொடங்கப்பட்டதோ, அங்கெல்லாம் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர் முனியநாதன் கூறினார்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குரூப் 2 தேர்வு இன்று காலையில் தொடங்கியது. அப்போது அங்கிருந்த அறை எண் 6-ல் தேர்வெழுதியவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. இதனால் குழப்பமடைந்த தேர்வர்கள் அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டனர். இதையடுத்து வினாத்தாள் குழப்பத்தை அதிகாரிகள் சரி செய்தனர். இதனால் தேர்வு மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×