

திண்டிவனம்:
திண்டிவனம், மயிலம் ஒன்றியம் பெலாக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பூண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பூங்கா.பாக்யராஜ் தலைமையில் மே தின கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஊராட்சி நிதி கணக்கு வரவு செலவு விபரம் பற்றியும், ஊராட்சி நிதி இருப்பு பற்றியும், 2022-2023 ஆம் ஆண்டு பணி திட்டமிடுதல் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஊராட்சியில் வருவாய் ஈட்டுதல் பற்றியும், ஊராட்சியிலேயே தரிசு புறம்போக்கு நிலங்கள் கண்டறிந்து கிராம வேலை உறுதி திட்ட மனித சக்தி மூலமாக சுகாதாரமான முறையில் தோட்டபயிர் செய்தல், மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பொருளீட்டும் திட்டங்கள் அதனை கிராம சந்தை வழியாக சந்தைப்படுத்தி பொருளாதாரத்தை மேம்பாடுத்தி தனிநபர் தன்னிறைவு ஊராட்சியாக உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் திடக்கழிவு திட்டம் மூலமாக மக்கும் குப்பைகளை உரமாக பயன்படுத்துதல் பற்றியும் ஊராட்சிமன்ற தலைவர் பூங்கா பாக்யராஜ் விரிவாக கூறினார்.
மேலும் 70 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து அவர்களின் பாதுகாப்பான சூழலை உறுதி செய்து அவர்களுக்கான உணவு உறுதி செய்ய திட்டம் வழிவகுத்தல் என்பது குறித்து பேசினார்.
இதில் பற்றாளர் அன்பு, கால்நடை உதவி இயக்குனர் ராஜேந்திரன், ஊராட்சி துணை தலைவர் கோமதி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ஆனந்தசேகரி, மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஊழியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.