அரியலூர் அருகே அரசு பஸ் மோதி தந்தை-மகன் பலி

அரியலூர் அருகே இன்று காலை அரசு பஸ் மோதியதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை படத்தில் காணலாம்.
விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை படத்தில் காணலாம்.
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 65). இவரது மகன் வெங்கடேஷ் (45). இருவரும் நுங்கு வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தந்தை, மகன் இருவரும் விற்பனை செய்வதற்காக நுங்குகளை வெட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு கீழப்பழுவூர் அருகே சென்று கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் தனியார் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்த சாலையை கடக்க முயன்றனர். அப்போது தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தந்தையும், மகனும் பலத்த காயங்களுடன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் விரைந்து சென்று தியாகராஜன், வெங்கடேசன் உடல்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சாலை விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com